கால்பந்து உலகின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் 70 அடி உயர சிலையைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சி கொல்கத்தாவில் இன்று (டிசம்பர் 13) நடைபெற்றது. மெஸ்ஸி தனது ‘GOAT India Tour 2025’-ன் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு வந்துள்ளார். சால்ட் லேக் மைதானத்தில் (யுவ பாரதி கிரிராங்கன்) நடைபெற்ற இந்த நிகழ்வில், மெஸ்ஸியை நேரில் காணவும், சிலையைத் திறந்து வைப்பதைக் காணவும், ரசிகர்கள் ரூ.12,000 வரை டிக்கெட்டுகளை வாங்கிக் குவித்திருந்தனர்.

எனினும், கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நிர்வாகக் குளறுபடிகள் காரணமாக, மெஸ்ஸி ரசிகர்களுக்கு சரியாகத் தெரியாமல், அவர் வந்த சிறிது நேரத்திலேயே திடீரென அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். மெஸ்ஸியின் இந்தச் சிறு நேர வருகை மற்றும் அவரை நேரில் பார்க்க முடியாததால் ஏற்பட்ட ஏமாற்றத்தால் கோபமடைந்த ரசிகர்கள், மைதானத்தில் இருந்த இருக்கைகள், பாட்டில்கள் மற்றும் விளம்பரப் பலகைகளை உடைத்து சூறையாடினர்.

மைதானத்தில் வன்முறை வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ‘X’ தளத்தில், “இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்காக நான் மெஸ்ஸியிடமும், அவரது ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இது குறித்து விசாரணை நடத்தப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவத்தை அடுத்து, நிகழ்ச்சியின் முக்கிய அமைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.