ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த கைது நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் ஆந்திர மாநிலம் முழுவதும் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவிற்கு செல்லும் பேருந்துகளும் தமிழ்நாடு எல்லையிலே நிறுத்தப்பட்டுள்ளது. ஆளும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் எதிர்கட்சியான தெலுங்கு தேசத்திற்கும் கடும் மோதல் போக்கு நீடித்துவரும் சூழலில் இந்த கைது நடவடிக்கை மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.