டெல்லியில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் – டெல்லி மோதலில், கிரிக்கெட் ரசிகர்களைத் தூங்க விடாத ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆட்டத்தின் போது கேட்ச் பிடிக்க முயன்ற டெல்லி கேபிடல்ஸ் வீரர் லுங்கி இங்கிடி, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மைதானத்திலேயே மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, உடனடியாக ஆம்புலன்ஸ் மைதானத்திற்குள் வரவழைக்கப்பட்டது.

​ஸ்டிரெட்ச்சரில் தூக்கிச் செல்லப்பட்ட இங்கிடியை, ஒரு வினாடி கூட தாமதிக்காமல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல டெல்லி காவல்துறை களத்தில் இறங்கியது. டெல்லியின் கடும் போக்குவரத்து நெரிசலையும் மீறி, ஆம்புலன்ஸ் மின்னல் வேகத்தில் செல்ல ‘பச்சை வழித்தடம்’ (Green Corridor) உருவாக்கப்பட்டது. சாலையில் உள்ள அனைத்து சிக்னல்களும் பச்சை நிறமாக மாற்றப்பட்டு, போக்குவரத்து முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது.

காவல்துறையின் இந்த அதிரடிச் செயலால் இங்கிடி சரியான நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.