கேரளா மாநிலம் ஆலப்புழாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. குட்டநாட்டில் இறந்த செருதானா மற்றும் எடத்துவா வாத்துகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டு, போபாலில் உள்ள பாதுகாப்பு ஆய்வகத்தில் விரிவான பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இப்பகுதியில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதையடுத்து, அப்பகுதியில் உள்ள வாத்துகள் அழிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வாத்துகளை அழிப்பதற்கான ஏற்பாடுகள் புதன்கிழமை மாலையே தொடங்கியுள்ளன. இந்நோய் உறுதி செய்யப்பட்டாலும், அச்சம் கொள்ளத் தேவையில்லை என நிர்வாகம் தெரிவித்துள்ளது. கேரளாவின் ஆலப்புழா மாவட்டம் வாத்து வளர்ப்பு தொழிலில் முக்கிய பங்காற்றி வருகிறது. இங்கிருந்து மாநிலம் முழுவதும் வாத்து முட்டைகள், இறைச்சி வினியோகம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.