வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள உத்தரா பகுதியில் பயிற்சி விமானம் ஒன்று பள்ளி வளாகத்தில் நொறுங்கி விழுந்துள்ளது. இந்த கோர விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 16 பேர் பள்ளி மாணவர்கள், 2 பேர் ஆசிரியர்கள் மற்றும் பயிற்சி விமானத்தை இயக்கிய பைலட் ஒருவர் உள்ளதாக பிரபல செய்தி நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன.
இந்த பயிற்சி விமானம், மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் விழுந்ததாகவும், அந்த நேரத்தில் பள்ளிக்குழந்தைகள் அந்த பகுதியில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான தகவலை பிற்பகல் 1:18 மணிக்கு தீயணைப்பு மற்றும் குடிமைப் பாதுகாப்பு துறைக்கு அறிவிக்கப்பட்டதாக அந்நிலையின் கட்டுப்பாட்டு அறை அதிகாரி லிமா கானம் கூறினார்.
A #Bangladesh Air Force plane crashed near Milestone College, Uttara. Rescue operations are underway. #Bangladesh
— Sabria Chowdhury Balland (@SabriaCBalland) July 21, 2025
உடனடியாக உத்தரா, மிர்பூர், குர்மிடோலா உள்ளிட்ட ஆறு பகுதிகளில் இருந்து 8 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்றன. பள்ளிக்கூட கட்டடத்தில் விளையாட்டு வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில், அந்த வகுப்புகள் முடிந்த சில நிமிடங்களில் இந்த பயிற்சி விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த பயிற்சி விமான விபத்தில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக உத்தரா அதுநிகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடைபெற்றதுடன், “பெரும் சத்தத்துடன் விமானம் கீழே விழுந்தது; பின்னர் மாணவர்கள் அலறியபடி ஓடினார்கள்” என அங்கிருந்த சிலர் கூறுகின்றனர்.
சமூக வலைதளங்களில் அந்த விபத்தின் அதிர்ச்சிகர வீடியோக்கள் பரவி வருகிறது. இதனால் முழு நாட்டிலும் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது. தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விபத்துக்கான காரணம் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எதுவும் வெளியிடப்படவில்லை.
