திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அஞ்சுகுளிப்பட்டியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மகள் இருந்துள்ளார். 20 வயதான பிரியா திண்டுக்கல் எம்.வி.எம் அரசு கலைக்கல்லூரியில் பொருளாதாரம் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 11-ஆம் தேதி தேனி மாவட்டம் கூடலூரில் பைக் மெக்கானிக்காக வேலை பார்க்கும் கமலக்கண்ணன் என்பவருக்கும் பிரியாவுக்கும் திருமணம் நடைபெற்றது. கடந்த 13-ஆம் தேதி புதுமண தம்பதியினர் அஞ்சுகுளிப்பட்டிக்கு மறு வீட்டு விருந்துக்கு வந்தனர்.

மறுநாள் அதிகாலை பிரியா தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். கண்விழித்து பார்த்த கமலக்கண்ணன் தனது மனைவி தூக்கில் தொங்கியதைக் கண்டு கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரியாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திருமணம் பிடிக்காததால் பிரியா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.