மும்பை லோக்கல் ரயிலில் நடந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்ட பெட்டியில் ஒரு பெண் பயணியை மற்றொரு பெண் மராட்டி பேசவில்லை என்று கண்டித்ததிலிருந்து வாக்குவாதம் ஏற்பட்டு, “இது மகாராஷ்டிரா… மராட்டியில் பேசு இல்லைனா வெளியே போ” என்று கூறும் வீடியோ வைரலானது.

இந்த வீடியோவில் பலர் கலந்து கொண்டு மராட்டி மொழியை கட்டாயமாக பேச வேண்டும் என வற்புறுத்துவது தெளிவாக காணப்படுகிறது.  இதேநேரத்தில், மும்பை விக்ரோலி பகுதியில் மராட்டி மொழியை இழிவுபடுத்தும் வகையில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போட்டதாகக் கூறப்படும் விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரேம் சிங் தேவ்தா என்பவர், விக்ரோலியில் உள்ள தனது ‘லக்கி மெடிக்கல் ஷாப்’-ஐ நடத்தி வந்தார். அவரது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் மராட்டி மொழியை குறை கூறியதாகக் கூறி, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவின் (MNS) உறுப்பினர்கள் அவரை கடையில் தாக்கியதோடு, மார்க்கெட்டில் சுற்றி சித்திரவதை செய்துள்ளனர்.

இதனையடுத்து அந்த வீடியோவும் இணையத்தில் பரவி, மக்கள் மத்தியில் கடும் எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது. பின்னர், அந்த கடைக்காரர் விக்ரோலி போலீஸ் நிலையத்தில் மன்னிப்பு கோரியுள்ளார். போலீசார் இதுபற்றி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.