ஒடிசாவில் சமூக ஊடக உள்ளடக்கத்திற்காக ஒரு சில இளைஞர்கள் காட்டு யானைகளை வம்புக்கு இழுத்து, துன்புறுத்தும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கடும் கண்டனங்களை குவித்து வருகிறது.

அந்த வீடியோவில், ஆபத்தை உணராமல் இளைஞர்கள் சிலர் தங்களின் மொபைல் போன்களில் வீடியோ எடுத்தபடி யானைகளை மிகவும் நெருங்கிச் சென்று எரிச்சலூட்டுகின்றனர். விலங்குகளின் பாதுகாப்பைப் பற்றியோ அல்லது தங்களின் சொந்த உயிர் ஆபத்தைப் பற்றியோ எந்தவொரு பயமும் இல்லாமல், வெறும் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காக அவர்கள் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டது பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

“>

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, இணையவாசிகள் பலரும் அந்த இளைஞர்களின் செயலுக்கு எதிராக தங்களது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். “இவர்களில் யாராவது ஒருவரை அந்த யானை மிதித்து துவம்சம் செய்திருக்க வேண்டும்” என்பது போன்ற ஆவேசமான கருத்துக்களை நெட்டிசன்கள் பகிர்ந்து, வனத்துறையினர் உடனடியாக தலையிட்டு இந்த இளைஞர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

இந்நிலையில் வனவிலங்குகளைத் துன்புறுத்துவதும், ரீல்ஸ் மற்றும் வீடியோக்களுக்காக அவற்றின் எல்லையை மீறி ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதும் சட்டப்படி குற்றமாகும் என்பதோடு, இது போன்ற செயல்கள் மனித-விலங்கு மோதல்களை மேலும் அதிகப்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.