அரியானா ஹிசர் மாவட்டம் கிருஷ்ணா நகரில் வசித்து வரும் ராகேஷின் மனைவி சுமன் ஆவார். கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி கருத்து வேறுபாடு மற்றும் சண்டை நிலவி வந்துள்ளது. இந்த நிலையில் சண்டை காரணமாக சுமன் அண்டை கிராமத்தில் வசித்து வரும் தன் சகோதரர்களான மன்ஜித், முகேஷை சமாதானம் பேச அழைத்து உள்ளார். அதன்பின் சகோதரர்கள் இரண்டு பேரும் இன்று சுமன் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் ராகேஷுக்கும் அவரது மனைவி சுமனுக்கும் இடையில் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனை தடுக்க சகோதரர்கள் முயற்சித்து உள்ளனர். அப்போது ராகேஷ் தான் வைத்திருந்த துப்பாக்கியால் மனைவி சுமன், மைத்துனர்கள் மன்ஜித், முகேஷை சுட்டுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய ராகேஷ் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு தப்பியோடிய ராகேஷையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.