தமிழ்நாட்டில் தற்போது டெங்கு பரவல் அதிகரிக்க தொடங்கியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன் 4 வயது சிறுவன் டெங்குவால் உயிரிழந்தார்.  கடலூர் மாவட்டத்தில் 6 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் டெங்கு காய்ச்சலால் 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வீடு, வீடாக சென்று கொசு ஒழிப்பு பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலையில் 6 பேர், புதுக்கோட்டையில் 5 பேருக்கும் டெங்கு பரவியுள்ளது.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் 20 குழந்தைகள் உள்பட 61 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து திருச்சியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு. தமிழகம் முழுக்க வேகமாக டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், காய்ச்சல் வந்தால் தாமாக மருத்துவம் செய்து கொள்ளாமல் உடனடியாக அருகாமையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.