
சென்னை அண்ணா நகரில் உள்ள மசாஜ் மையம் ஒன்றில், “வித்தியாசமான உல்லாசம்” என்ற ஆசை வார்த்தையில் அழைத்த தொழிலதிபர், போலி போலீசாரால் தாக்கப்பட்டு நகை, பணம் போன்றவற்றை இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த 50 வயதான தொழிலதிபர் சார்லஸ், தேக்கு மர வியாபாரத்தில் ஈடுபட்டவர். அண்ணா நகர் மசாஜ் செண்டரில் பணியாற்றும் ஆண்ட்ரியா என்ற பெண்ணுடன் பழகி வந்த நிலையில், “சூளைமேட்டில் உள்ள மசாஜ் விடுதியில் வித்தியாசமான அனுபவம் காத்திருக்கிறது” என ஆசை வார்த்தை கூறி அழைத்துள்ளார்.
சூளைமேட்டில் உள்ள அந்த மசாஜ் விடுதிக்கு சென்ற சார்லஸை, போலீசாக நடித்த நபர்கள் “இந்த வயதில் உனக்கு இதெல்லாம் தேவையா?” என்று கடுமையாக தாக்கினர். அவர் மயங்கி விழுந்த நிலையில், 20 பவுன் நகைகள், விலை உயர்ந்த கைக்கடிகாரம் மற்றும் வங்கி கணக்கிலிருந்து ₹40,000-ஐ கூகுள் பே மூலம் பறிக்கப்பட்டது.
பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சார்லஸ், சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், இந்த சூழ்ச்சிக்கு ஆண்ட்ரியா, அவரது கணவர் கோகுலகிருஷ்ணன் உள்ளிட்டோர் காரணம் என தெரியவந்தது. போலீசார் நடத்திய தேடலில், 60 வயதான ரேகா சாவித்திரி மற்றும் 23 வயதான நவீன் குமார் ஆகிய இருவரும் தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் கைது செய்யப்பட்டனர்
அதிர்ச்சிக்குரிய தகவலாக, கைதான ரேகா சாவித்திரி நவீன் குமாருக்கு பாட்டி முறை சொந்தம் என்பது தெரியவந்தது. மேலும், ரேகா மீது ஏற்கனவே வடபழனி போலீசில் இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும், இவர் பணம் மற்றும் நகைகளை பறிக்கும் குற்றவாளி என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தலைமறைவாக உள்ள ஆண்ட்ரியா மற்றும் அவரது கணவர் கோகுலகிருஷ்ணனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர்கிறது.