தமிழர்களின் பாரம்பரிய திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதத்தில் அரிசி பெறும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழுக்கரும்பு ஆகியவற்றுடன் சேர்த்து ரூ.1,000 ரொக்கமும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் வருகிற 9-ந் தேதி (திங்கள்) முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்பட உள்ளது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கான 77 குடும்ப அட்டைகள் உள்பட மொத்தம் 4 லட்சத்து 32 ஆயிரத்து 65 ரேஷன் அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பானது வழங்கப்பட உள்ளது.

மேலும் ரேஷன் கடைகளில் பொதுமக்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும்பொருட்டு அந்தந்த ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடு, வீடாகச்சென்று டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி  நேற்று முதல் அந்தந்த ரேஷன் கடை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் டோக்கன் வழங்கும் பணியானது வருகிற 8-ந் தேதிக்குள் முடிக்க நடவடிக்கையும்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.