
தமிழ்நாட்டில் தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கன மழை வெளுத்து வாங்குகிறது. இதேபோன்று விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் பிறகு இன்று மற்றும் நாளை திண்டுக்கல், தூத்துக்குடி, விருதுநகர், சேலம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, மதுரை, திருப்பூர், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் நாளை மறுநாள் கோவை மாவட்டம் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.