கூட்டுறவுத் துறையின் கீழ் சென்னை மத்திய கூட்டுறவு வங்கி சார்பாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி, பயனாளிகளுக்கு சான்று வழங்குதல் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு புதிய வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு சென்னை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பெரம்பூர் மகேஷ் தலைமை தாங்கியுள்ளார்.  இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன் மற்றும் இந்து சமயநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர் பாபு போன்றோர்  கலந்துகொண்டு பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ்களை வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் நிகழ்ச்சியில் அமைக்க சேகர் பாபு கூறியதாவது, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதல்வர் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார். அதேபோல் முதலமைச்சர் அதற்காக ஒரு தொகையை ஒதுக்கீடு செய்து தற்போது அதை நடைமுறைப்படுத்தி வருகின்றார். முதல்வர் ஸ்டாலின் கடன் பெற்றவர்களுக்கு தொழில் செய்வதற்கு உதவியாக வருமுன் காப்போம் வாசகத்திற்கு இணங்க 18 குழுக்களுக்கு 1.21 கோடி கடன் உதவியாக வழங்கியவர். மேலும் பொதுமக்கள் தொழில் முனைவோர் அதிக வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக 452 பேருக்கு 3.18 கோடியை வாழ்வாதாரத்திற்காக கடனாக வழங்கியவர்.

அதேபோல் கூட்டுறவு துறையை பொருத்தமட்டில் பயிர் கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி போன்ற அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்யக்கூடிய ஒரே துறை தமிழக அரசின் கூட்டுறவுத்துறை தான் என அவர் கூறியுள்ளார். இதனையடுத்து அமைச்சர் பெரிய கருப்பன் கூறியதாவது, மகளிர் சுய உதவி குழுவிற்கு விதை விதைத்தவர் கலைஞர் தான். தமிழகத்தில் சிறிய அளவில் தொடங்கி பெரிய அளவில் மகளிர் சுய உதவி குழு வளர்ச்சி அடைய செய்தவர் நமது கலைஞர். இது இன்றைக்கு மிகப்பெரிய அளவில் வருவதற்கு முதல்வர் ஸ்டாலின் தான் காரணம்.

தமிழகத்தில் நிர்ணயம் செய்யப்பட்ட அளவை விட கூடுதலாக கடந்த 2022 -ஆம் ஆண்டு 21,000 கடன் தொகையாக வழங்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினை போலவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார். தமிழக முதல்வராக ஸ்டாலின் ஆட்சி பொறுப்பை ஏற்ற பின் மூன்று வருடங்களில் பத்தாயிரம் கோடிக்கு மேல் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் இன்னும் சில நாட்களில் விவசாயிகளுக்கான கடன் தொகையின் அளவு 12 ஆயிரம் கோடியை எட்ட உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.