உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்ற இரண்டு மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம் ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியுள்ளது. அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண்களுக்கு, பயிற்சி பெறாத ஊழியர்கள் தவறான முறையில் ஊசி போட்டதாகக் கூறப்படுகிறது. இதனை அந்த மாணவிகள் தட்டிக்கேட்டபோது, ஆத்திரமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் ஒன்று சேர்ந்து அவர்களைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மாணவிகள் என்றும் பாராமல் அவர்களைத் தாக்கியதுடன், அவர்களின் ஆடைகளைக் கிழித்து, மிக மோசமான முறையில் பாலியல் சீண்டல்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

​இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. “எங்கள் ஆடைகளைக் கிழித்து, தவறான இடங்களில் தொட்டு அசிங்கப்படுத்தினார்கள்; இதைப் புகாரளிக்கக் காவல் நிலையம் சென்றால், அங்கே குற்றவாளியான மருத்துவர் போலீஸாருடன் அமர்ந்து தேநீர் குடித்துக் கொண்டிருந்தார்” என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். காவல்துறையினரின் இத்தகைய அலட்சியப்போக்கு மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.