பொங்கல் பரிசு தொகுப்பை இன்று காலை 10 மணிக்கு ஆழ்வார்பேட்டையில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.

தமிழகத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு நீள  கரும்புடன் ரூ 1000 சேர்த்து வழங்கப்படும் என்பதற்கான அரசாணையையும் நேற்று தமிழக அரசு  வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 கோடியே 19 லட்சத்து 71 ஆயிரத்து 113  குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும், இதனால் அரசுக்கு ரூ. 2,436 கோடி செலவினம் ஏற்படும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த 7ஆம் தேதி முதல் நேற்று வரை பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்களும் விநியோகிக்கப்பட்டது. இதையடுத்து இன்று முதல் 13ஆம் தேதி வரை டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்தில், குறிப்பிட்ட நாளில் பொதுமக்கள் பொங்கல் தொகுப்பு பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 13ஆம் தேதிக்குள் பொங்கல் தொகுப்பு பெற முடியாதவர்கள் 14ஆம் தேதி பொங்கல் தொகுப்பு பெற்றுக் கொள்ளலாம்  என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் நகரிலுள்ள ரேஷன் கடையில்  இன்று காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ரூபாய் 1000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை தொடங்கி வைக்கிறார். இன்று முதல் பொங்கல் தொகுப்பை ரேஷன் கடைகளில் மக்கள் டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாளில் பெற்றுக்கொள்ளலாம்..