சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூரில் இருந்து வள்ளலார் நகர் வரை தடம் எண் 56 ஏ கொண்ட பேருந்து இயக்கப்படுகிறது. கடந்த 22-ஆம் தேதி பேருந்து வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சென்றது. அப்போது தியாகராஜ கல்லூரியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேருந்தின் கூரை மீது ஏறி “தியாகராய கல்லூரிக்கு ஜே, தியாகராய கல்லூரி புளியங்கோ ஜே” என குறி ரகளையில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் பேருந்து ஓட்டுனர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்படி போலீசார் வந்ததும் கல்லூரி மாணவர்கள் இறங்கி தப்பி ஓடினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில் பேருந்தின் மேற்கூரை மீது பயணம் செய்து அட்டகாசம் செய்த மாணவர்கள் தியாகராஜா கல்லூரியில் படிக்கும் கோகுல கிருஷ்ணன், பிர்வின், ஜோசப், பிரவீன் குமார் என்பது தெரியவந்தது.

அவர்கள் நான்கு பேரையும் போலீசார் பிடித்து போலீஸ் துணை கமிஷனர் பவன் குமார் ரெட்டி முன்னிலையில் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலீஸ் துணை கமிஷனர் பவன் குமார் ரெட்டி தவறு செய்த நான்கு பேரையும் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து காலை, மாலை என தொடர்ந்து ஏழு நாட்கள் போக்குவரத்தை சீர் செய்யும் வேண்டும் என நூதன முறையில் தண்டனை வழங்கி உள்ளார். அதன்படி மாணவர்கள் மூலக்கொத்தளம் தங்கசாலை பகுதியில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.