பிரான்ஸ் நாட்டில் செயின்ட் ஜூன் டி லூஸ் என்ற கடற்கரை பகுதியில் கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்தப் பள்ளியில் 50 வயதான ஆக்னஸ் லாஸ்லே என்ற ஆசிரியை பணிபுரிந்து வந்தார். இவர் சம்பவம் நடந்த அன்று வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது வகுப்பறையில் இருந்த 16 வயது மாணவன் ஒருவன் திடீரென ஆசிரியை ஆக்னஸை கத்தியால் குத்தி விட்டு எந்த சலனமும் இல்லாமல் வகுப்பறையை விட்டு வெளியேறி உள்ளார். மேலும் அவர் பக்கத்து வகுப்பறைக்கு சென்று அங்குள்ள ஆசிரியரிடம் நடந்ததை கூறிவிட்டு கத்தியை ஒப்படைத்துள்ளார்.

ஆனால் அதற்குள்ளாக ஆசிரியை ஆக்னஸ் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவனை கைது செய்துள்ளனர். இதனை அடுத்து போலீசார் அந்த மாணவனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில், மாணவன் தனக்கு பேய் பிடித்துள்ளதாகவும் அந்த பேய் தான் தன்னை ஆசிரியை ஆக்னஸை கொலை செய்ய சொன்னதாகவும் கூறியுள்ளார். இந்த வாக்குமூலத்தால் போலீசார் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மாணவன் மனரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.