ஹரியானா மாநிலத்தில் உள்ள மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தில் (MDU), பெண் துப்புரவுப் பணியாளர்கள் இருவர் தங்கள் மாதவிடாய் இருப்பதை நிரூபிக்க, தங்கள் அந்தரங்க உறுப்புகள் மற்றும் சானிட்டரி பேட்களின் புகைப்படங்களை எடுக்க கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, பல்கலைக்கழகத்தின் மூன்று அதிகாரிகள் மீது ஹரியானா காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. பாதிக்கப்பட்ட நான்கு பெண் பணியாளர்கள் அளித்த எழுத்துப்பூர்வ புகாரில், உடல்நிலை சரியில்லை என்று கூறியபோதும், ஆண் மேற்பார்வையாளர்கள் வேகமாக வேலை செய்யுமாறு துன்புறுத்தியதாகவும், அழுத்தம் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

“எங்கள் மாதவிடாயின் வலி காரணமாக வேகமாக வேலை செய்ய முடியாது என்று நாங்கள் அவர்களிடம் கூறினோம். அதற்கு மேற்பார்வையாளர்கள், ‘மாதவிடாய் சுழற்சியை உறுதிப்படுத்த, உங்கள் அந்தரங்க உறுப்புகளின் புகைப்படங்களை ஆதாரமாக எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினர்,” என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு மறுத்தபோது, பணிநீக்கம் செய்யப்படுவோம் என்று மிரட்டப்பட்டதால், நான்கு பேரில் இருவர் கட்டாயத்தின் பேரில் கழிவறையில் புகைப்படங்களை எடுத்ததாகக் கூறினர். இந்தச் சம்பவம் அக்டோபர் 26ஆம் தேதி ஹரியானா ஆளுநரின் வருகைக்குச் சில மணி நேரங்களுக்கு முன் நடந்துள்ளது. புகாரின் பேரில், துப்புரவு மேற்பார்வையாளர்கள் விட்டேந்தர், வினோத் ஹூடா மற்றும் உதவிப் பதிவாளர் ஷியாம் சுந்தர் ஆகியோர் மீது பாலியல் துன்புறுத்தல், அடக்கத்தை அவமதிக்கும் செயல்கள் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகம் இரண்டு மேற்பார்வையாளர்களை இடைநீக்கம் செய்து, உள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. பணியிடத்தில் பெண்களின் பாதுகாப்பும் மரியாதையும் மிக முக்கியம் என்றும், தவறு செய்தவர்கள் தப்ப முடியாது என்றும் பல்கலைக்கழகம் உறுதி அளித்துள்ளது.
