அமெரிக்க நாட்டில் அர்கான்சாஸ் மாகாணத்தில் பில் மற்றும் ஹிலாரி கிளின்டன் தேசிய விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து இரட்டை எஞ்சின் கொண்ட சிறிய ரக தனியார் விமானம் ஒன்று ஓஹியோ மாகாணத்தில் உள்ள ஜான் கிளன் கொலம்பஸ் சர்வதேச விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் ஐந்து பேர் பயணித்துள்ளனர்.

இந்நிலையில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே திடீரென விபத்துக்குள்ளானது. இந்த தகவலை மத்திய விமான போக்குவரத்து கழகம் மெயில் மூலம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினரும் தீயணைப்பு துறையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியை தொடங்கினர். இதில் விமானத்தில் பயணித்த ஐந்து பேரும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இருப்பினும் விபத்து ஏற்பட்டதற்கான சரியான காரணம் இதுவரை தெரியாததால் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.