அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தைச் சேர்ந்த KTTC செய்தி நிலையத்தின் தலைமை வானிலை ஆய்வாளராக பணியாற்றி வருபவர்  நிக் ஜான்சன். இவர்  நேரடி வானிலை அறிக்கை வழங்கிக் கொண்டிருந்தபோது தனது மனைவிக்கு குறுஞ்செய்தி அனுப்பிய தருணம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

ஜூலை 28ஆம் தேதி, மினசோட்டா மாநிலம் ரோசெஸ்டர் பகுதியில் ஏற்பட்ட கடும் புயல் நிலவரத்தைப் பற்றி நேரலையில் தெரிவிக்கும் போது, திடீரென போனை எடுத்து தனது மனைவிக்கும், ஆறு மாதக் குழந்தைக்கும் பாதுகாப்பான தங்குமிடம் கிடைத்துள்ளதா என்பதை உறுதிசெய்ய மெசேஜ் அனுப்பினார். பின்னர் நேரலையிலேயே “சாரி, என் மனைவிக்கு மெசேஜ் அனுப்ப வேண்டியிருந்தது” என்று மன்னிப்பு கேட்டார்.

இந்த காட்சி வெளியான பிறகு, சிலர் அவரை “தொழில்முறையற்றவர்” என்றுகடுமையாக  விமர்சித்தனர். ஒரு மின்னஞ்சலில், “குழந்தையை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதை உறுதிசெய்ய மனைவியை அழைக்க வேண்டுமா? சிலர் அதை அழகாக நினைக்கலாம், ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை” என எதிர்மறையாகவும்   விமர்சிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த ஜான்சன், ஃபேஸ்புக்கில், “நான் என் வேலையையும் மக்களின் பாதுகாப்பையும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறேன். ஆனால், நான் ஒரு கணவன் மற்றும் தந்தையும் கூட. கடுமையான வானிலையின் மத்தியில், என் மனைவியும் குழந்தையும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய சில விநாடிகள் எடுத்தேன். இது தொழில்முறையின்மை அல்ல, மனிதத்தன்மை. வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் அதிக புரிதலும் மரியாதையும் காட்ட வேண்டும்” என்று பதிவு செய்தார்.

“>

 

ஜான்சனின் விளக்கத்துக்குப் பிறகு, நெட்டிசன்கள் பெருமளவில் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். “நல்ல தந்தை”, “குடும்பம் முதலில்” போன்ற பாராட்டு கருத்துகள் அதிக அளவில் வந்தன. “நேரலையில் இருந்தாலும், குடும்பத்தின் பாதுகாப்பு முக்கியம். இதற்காக விமர்சிக்காமல் பாராட்ட வேண்டும்” என பலரும் பதிவிட்டுள்ளனர். இந்த சம்பவம், தொழில்முறை கடமைக்கும், குடும்பப் பொறுப்புக்கும் இடையிலான சமநிலையைப் பற்றிய விவாதத்தையும் தூண்டியுள்ளது.