புத்தாண்டு பிறப்பைக் கொண்டாடுவதற்காக மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஃபெர்குசன் கல்லூரி சாலையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டனர். நள்ளிரவில் உற்சாகம் எல்லை மீறிய நிலையில், அங்கு நின்றுகொண்டிருந்த அரசுப் பேருந்துகள் மீது ஏறி இளைஞர்கள் நடனமாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் போக்குவரத்து நெரிசலுக்கு நடுவே, பேருந்தின் கூரை மீது நின்று கொண்டு கைகளை தட்டியும், கூச்சலிட்டும் இளைஞர்கள் ஆடிய வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் அமைந்த இந்தச் செயல், பலரது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
View this post on Instagram
“>
இந்தக் கொண்டாட்டத்தின் போது கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். எஃப்சி சாலையில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் போக்குவரத்து முழுமையாக முடங்கியது. பேருந்துகள் மீது ஏறி ஆபத்தான முறையில் ஆடிய இளைஞர்களைக் கலைக்க போலீசார் முயன்றனர்.
மேலும் விதிகளையும் பாதுகாப்பையும் மீறி பொது இடங்களில் இத்தகைய அநாகரிகமான செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வீடியோ ஆதாரங்களை வைத்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
