சென்னை, பெரம்பூர், செம்பியம் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் வினோத் குமார்(32). கடந்த சில நாட்களுக்கு முன் செம்பியம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலீஸ் நிலையத்தில் புகாரளிக்க வந்தார். அவரிடம் வினோத்குமார் செல்போன் எண்ணை வாங்கி வைத்துக்கொண்டார். இதையடுத்து வினோத்குமார் அடிக்கடி அந்த இளம் பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்ததாகவும், அவரது செல்போனுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் அந்த பெண்ணின் கணவருக்கும் வினோத்குமாருக்கும் இடையில் வாய் தகராறு ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. இது தொடர்பாக செம்பியம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த புளியந்தோப்பு சரக துணை கமிஷனர் ஈஸ்வரன் புகார் கொடுக்க வந்த பெண்ணின் தொலைபேசி எண்ணை வாங்கி அநாகரீகமாக நடந்துக்கொண்ட முதல் நிலை காவலர் வினோத்குமாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தார்.