தமிழ்நாட்டில் பிளஸ் டூ பொதுத் தேர்வு மார்ச் முதல் வாரம் தொடங்க உள்ளது. இந்த தேர்வினை 8 லட்சம் மாணவர்கள் எழுத இருக்கின்றனர். இந்த பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் சமீபத்தில் தான் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. பொது தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகள் ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் எனவும் பள்ளி கல்வித்துறை சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழகம் முழுவதும் பிளஸ் டூ தேர்வு எழுத தயாராக இருக்கும் மாணவ, மாணவிகள் தங்களை தயார் படுத்தி  வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளி கல்வித்துறை தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது 2022- 2023 ஆம் கல்வியாண்டில் நான் முதல்வன் திட்டம் சார்ந்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு உயர் கல்வி சேர்க்கைக்கான அனைத்து விண்ணப்பங்களும் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பித்துக் கொள்ள முடியும். பெரும்பாலான கல்லூரிகள், கல்லூரி சார்ந்த தகவல்களை மின்னஞ்சல் மூலமாகவே மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. அதனால் மின்னஞ்சல் முகவரி ஒவ்வொரு மாணவர்களுக்கும் கட்டாயமான ஒன்று என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதனால் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் ஒவ்வொரு மாணவருக்கும் மின்னஞ்சல் முகவரியை வகுப்பு ஆசிரியர்கள் உதவியுடன் உருவாக்க தக்க  நடவடிக்கை எடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் மின்னஞ்சல் உருவாக்கிய பின் உள் நுழைவது எப்படி? பெறப்பட்ட மின்னஞ்சலை திறப்பது மற்றும் படிப்பது பற்றிய விளக்கத்தை மாணவர்களுக்கு அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதற்காக மாணவர்கள் கடவுச்சொல்லை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என பள்ளி கல்வித்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வருகிற ஒன்பதாம் தேதி முதல் 12 -ஆம் தேதி வரை இந்த செயல்பாட்டினை அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் ஹைடெக் லேப் கணினிகளை  பயன்படுத்தி மேற்கொள்ள வேண்டும் என பள்ளி கல்வித்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.