தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பூதிநத்தம் கிராமத்தில் வேடியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். நிறை மாத கர்ப்பிணியான புவனேஸ்வரிக்கு கடந்த மாதம் 24-ஆம் தேதி பாப்பாரப்பாடியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு புவனேஸ்வரி தனது குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டிருந்தபோது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தையை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் குழந்தையின் பெற்றோரும் உறவினர்களும் கதறி அழுதனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்து 16 நாட்களை ஆன நிலையில் குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.