ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வரும் நிலையில் பிரசாதமாக லட்டு வாங்கி செல்கிறார்கள். திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் பிளாஸ்டிக் பைகள், துணி பைகள் அல்லது பேப்பர் பைகளில் வழங்கப்படுகிறது. பிளாஸ்டிக் பைகளினால் சுற்றுச்சூழல் மாசுபடும் அபாயம் இருக்கிறது. இதன் காரணமாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி திருப்பதியில் இனி லட்டு பிரசாதம் ஓலை பெட்டியில் வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

பனை ஓலை மற்றும் தென்னை ஓலையால் செய்யப்பட்ட பெட்டிகளை 10, 20 மற்றும் 30 ஆகிய விலைகளில் விற்பனை செய்வதற்கு தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ள நிலையில், விரைவில் அதற்கான கவுண்டர்கள் அமைத்து மூன்று விலை அளவுகளில் ஓலைப் பெட்டிகள் விற்பனை செய்யப்படும். மேலும் ஓலை பெட்டிகளில் லட்டு விற்பனை செய்வதன் மூலம் கிராமப்புற வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதோடு சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் குறைக்கலாம் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.