மத்தியப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் திவிஷா சர்மா வரதட்சணை கொடுமை வழக்கில், அவரது மாமியாரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான கிரி பாலா சிங் பேசியதாகக் கூறப்படும் சர்ச்சை ஆடியோ இணையத்தில் வெளியாகி புதிய புயலைக் கிளப்பியுள்ளது.

நொய்டாவைச் சேர்ந்த முன்னாள் மாடல் அழகி மற்றும் தெலுங்கு பட நடிகை திவிஷா சர்மா என்பவருக்கும், போபாலைச் சேர்ந்த சமர்த் சிங் என்பவருக்கும் கடந்த 2025 டிசம்பரில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின் திவிஷா வரதட்சணைக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.

இந்நிலையில், திவிஷாவின் மாமியாரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான கிரி பாலா சிங்கிற்கும், திவிஷாவின் சகோதரரும் ராணுவ மேஜருமான ஹர்ஷித் சர்மாவிற்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல் ஆடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில், திவிஷாவின் கடந்தகால உறவுகள் மற்றும் ஒழுக்கம் குறித்து கிரி பாலா சிங் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். அதற்கு மேஜர் ஹர்ஷித் சர்மா, “உங்கள் வீட்டு மருமகளிடம் இப்படி எப்படிக் கேட்கலாம்?” என ஆவேசமாக வாதிட்டுள்ளார்.

அதற்குப் பதிலளித்த ஓய்வு பெற்ற நீதிபதி, “மருமகளின் ஒழுக்கத்தைக் கேள்வி கேட்க எனக்கு முழு உரிமை உள்ளது. நான் குவாலியரில் பணிபுரிந்தபோது பாலியல் தொழிலாளர்களுடன் வேலை செய்துள்ளேன். சிலர் தங்கள் உடலை விற்று சமூக அந்தஸ்தை அடைகிறார்கள்” எனத் தற்காத்துப் பேசியுள்ளார். மேலும், திவிஷாவின் கணவர் சமர்த் சிங், தனது மனைவியை இழிவான சொற்களால் திட்டியதாகவும் அந்த ஆடியோ மூலம் தெரியவந்துள்ளது.

இந்த வரதட்சணைக் கொடுமை வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வரும் திவிஷாவின் கணவர் சமர்த் சிங் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரைப் பற்றிய தகவல் கொடுப்போருக்கான பரிசுத் தொகையை போபால் போலீஸார் தற்போது ரூ.30,000 ஆக உயர்த்தியுள்ளனர்.

முன்னதாக அறிவிக்கப்பட்ட ரூ.10,000 பரிசை ரத்து செய்துவிட்டு, குற்றவாளியை விரைந்து பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அவர் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க ‘லுக் அவுட்’ நோட்டீஸ் அனுப்பவும் போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த வழக்கை விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு முழு நீதி பெற்றுத் தரப்படும் என மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் ஏற்கனவே உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.