உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள உயரமான குடியிருப்பு வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்த வாக்குவாதம் பெரிதும் தீவிரமடைந்து வன்முறையாக மாறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு பணியில் இருந்தவர்களும், குடியிருப்பாளர்களும் தங்களுக்கிடையே தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் இரவு 10.30 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது. பாதுகாப்புப் படையினர் மற்றும் குடியிருப்பாளர் அர்ஜுன் ஆகியோருக்கு இடையில், ‘தவறான பக்க நுழைவு’ குறித்த விவகாரம் முதலில் வாய் தகராறாக ஆரம்பிக்கப்பட்டது. பின்னர், அது கைகலப்பாக மாறியது. இடையில் தலையிட்டு சமாதானப்படுத்த முயன்ற ஒரு பெண்ணும் தாக்குதலுக்கு உள்ளாகினார்.

 

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. சீருடையில் இருந்த ஒரு பாதுகாப்புப் பணியாளர், ஒரு பெண்ணை குத்தும் காட்சி மற்றும் பின்னர் அவளைத் தடவ முயல்வது வீடியோவில் பதிவாகியுள்ளது. சம்பவ இடத்தில் அலறும் அந்த பெண்ணின் குரலும், அதைத் தடுக்கும் குடியிருப்பாளர்களும் தெளிவாக காணப்படுகின்றனர்.

இந்த வன்முறைக்குப் பின்னர், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலைமையை கட்டுப்படுத்தினர். கௌதம் சிங் மற்றும் சத்யம் சுக்லா ஆகிய இரண்டு பாதுகாப்பு காவலர்களும், அர்ஜுன் மற்றும் அபிஷேக் ஆகிய குடியிருப்பாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விவரங்களின்படி, அர்ஜுன் தனது காரில் “No Entry” எனக் குறிக்கப்பட்ட வெளியேறும் வாயில் வழியாக நுழைய முயற்சித்துள்ளார். இது பாதுகாவலர்களுடன் வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது. பின்னர் நிலைமை மோசமடைந்தது. அர்ஜுனை தாக்கியதாக கௌதம் சிங் மற்றும் சத்யம் சுக்லா மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதுபோன்று பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு இடையிலான மோதல்கள் பெரும் சிக்கல்களுக்கு வழிவகுக்கக்கூடியவை என்பதால், இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.