சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் குட்வில் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அங்கு இன்று காலை 7.30 மணியளவில் பள்ளிக்கு சென்ற 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வகுப்பறையில் அமர்ந்திருந்து பாடத்தை கவனித்துக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென வகுப்பிலிருந்து வெளியே வந்த மாணவி இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து படுகாயமடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உடனடியாக மாணவியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது பள்ளிகள் திறந்து சில நாட்கள் தான் ஆனது. ஆனால் 9 மணிக்கு திறக்க வேண்டிய பள்ளியை 7.30 -க்கே திறந்து ஸ்பெஷல் கிளாஸ் என்ற பெயரில் மாணவர்களுக்கு அதிக சுமையை கொடுத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் திடிரென மாணவி‌ தற்கொலை முயற்சி மேற்கொண்டதற்கான  காரணம் பள்ளியில் கொடுக்கும் அதிக அழுத்தமா அல்லது இல்லை வீட்டில் வேறு ஏதேனும் பிரச்சனையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தனியார் பள்ளிகளில் ஸ்பெஷல் கிளாஸ் என்ற பெயரில் அதிகாலையிலேயே மாணவர்களை வரவழைத்து அதிக மன அழுத்தம் கொடுப்பதை நிறுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.