டெல்லியில் ஆப்பிரிக்க நாட்டவர் ஒருவரை இந்தி கற்கச் சொல்லி மிரட்டிய விவகாரத்தில், பாஜக கவுன்சிலர் ரேணு சௌத்ரி தனது செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் சிறுவர்களுக்கு கால்பந்து பயிற்சி அளித்து வந்த ஆப்பிரிக்க பயிற்சியாளரிடம், “இங்கேயே தங்கி சம்பாதிக்கும் நீங்கள் ஏன் இன்னும் இந்தி கற்கவில்லை? இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்தி கற்கவில்லை என்றால் இந்தப் பூங்காவிற்குள் நுழைய அனுமதிக்க மாட்டேன்” என்று ரேணு சௌத்ரி மிரட்டல் விடுத்தார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கடும் கண்டனங்களை எழுப்பியது. இந்த விவகாரம் தேசிய அளவில் விவாதமானதை அடுத்து, டெல்லி பாஜக தலைமை ரேணு சௌத்ரிக்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்டது. விளையாட்டுக்கு மொழி தடையாக இருக்கக் கூடாது என்றும், ஒரு வெளிநாட்டவரிடம் இவ்வாறு நடந்து கொண்டது முறையல்ல என்றும் கட்சித் தலைமை அவருக்கு எச்சரிக்கை விடுத்தது.

“>

இதனைத் தொடர்ந்து, தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்ட ரேணு சௌத்ரி, யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோருவதாகவும், அப்பகுதி மக்களின் புகார்களைத் தீர்க்கவே தான் அங்கு சென்றதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.