பாகிஸ்தானின் தலைமை நீதிமன்றமான உச்ச நீதிமன்றக் கட்டடத்தின் அடித்தளத்தில் கேஸ் சிலிண்டர்  ஒன்று வெடித்துச் சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில், குறைந்தது 12 பேர் காயமடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மைய ஏர் கண்டிஷனிங் சிஸ்டத்தில் பழுதுபார்க்கும் பணி நடந்துகொண்டிருந்தபோதே இந்த வெடிவிபத்து நடந்ததாக சமா டிவி (SAMAA TV) செய்திகள் தெரிவிக்கின்றன.

விபத்தின் தாக்கம் உச்ச நீதிமன்ற வளாகம் முழுவதையும் உலுக்கியதால், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பீதியில் வெளியே ஓடினர். குறிப்பாக, விபத்தின் காரணமாக நீதிமன்ற அறை எண் 6  பெரும் சேதத்திற்குள்ளாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

“>

 

இந்த பயங்கரமான வெடி விபத்து ஏற்பட்ட நேரத்தில், நீதிபதிகள் அலி பக்கர் நஜாஃபி மற்றும் ஷேசாத் மாலிக் ஆகியோர் வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த இடத்திற்கு அருகே, உச்ச நீதிமன்ற ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த கேண்டீன் அமைந்துள்ளது.

பல நாட்களாக அந்தப் பகுதியில் வாயு கசிவு (Gas Leakage) இருந்துள்ளதாகவும், அதனைப் பழுதுபார்க்கும் பணியின்போதுதான் இந்த விபத்து நடந்ததாகவும் இஸ்லாமாபாத் ஐ.ஜி.பி. அலி நாசிர் ரிஸ்வி செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த வெடி விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் என்றும், அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்களது உயிர் ஆபத்தில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.