கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனைப் பகுதியைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர் தனது பணியின் நிறைவுநாளில் காட்டிய பாசமும் கண்ணீரும் தற்போது சமூக வலைதளங்களில் பலரைக் கண் கலங்க வைத்துள்ளது. கடந்த 18 ஆண்டுகளாகத் தான் ஓட்டி வந்த அரசுப் பேருந்திற்கு அவர் அளித்த விடைபெறும் தருணம் அனைவரையும் நெகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.
இயந்திரங்களை வெறும் இரும்புப் பெட்டியாகப் பார்ப்பவர்கள் மத்தியில், தான் நம்பி வாழ்ந்த தொழிலையும், தனக்குச் சோறிட்ட வாகனத்தையும் ஒரு உயிர் நண்பனாகப் பாவித்து அவர் வெளிப்படுத்திய பாசம் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.
பணி ஓய்வு பெறும் கடைசி நாளில், தான் இவ்வளவு காலம் இயக்கிய பேருந்துக்கு அருகில் சென்ற அந்த ஓட்டுநர் பால்குரியன், அதனைப் பிரிந்து செல்ல மனமின்றி கதறி அழுதுள்ளார். அந்தப் பேருந்தின் முன் நின்று நெகிழ்ச்சியுடன் முத்தம் கொடுத்ததுடன், அதன் டயர்களைத் தன் கைகளால் தடவி தனது நன்றிக்கடனை வெளிப்படுத்திய காட்சி அங்கிருந்த சக ஊழியர்களையும் கலங்கச் செய்தது.
ஒரு வாகனத்திற்கும் அதற்குச் சொந்தமான ஓட்டுநருக்கும் இடையே உள்ள பந்தம் எந்த அளவுக்கு ஆழமானது என்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில் இந்தச் சம்பவம் அமைந்திருந்தது. சாதாரண மனிதர்களின் இது போன்ற தூய்மையான அன்பும் பாசமும் பலருக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளதுடன், இந்தப் பிரியாவிடை வீடியோவுக்குப் பலத்த வரவேற்பும் கிடைத்து வருகிறது.
18 ஆண்டுகள் ஓட்டிய அரசு பேருந்துக்கு கண்ணீருடன் விடை கொடுத்தார் டிரைவர் பால்குரியன்.
ஓய்வு நாளில் பேருந்துக்கு முத்தம் கொடுத்து, டயர்களை தடவி பாசத்தை வெளிப்படுத்தினார்.
வெறும் வாகனம் அல்ல, சோறு போட்ட தன் உயிர் நண்பனுக்கு அவர் கொடுத்த நெகிழ்ச்சியான பிரியாவிடை இது.
கேரளம் -… pic.twitter.com/WsHJC9p0Rj
— Kᴀʙᴇᴇʀ – தக்கலை கபீர் (@Autokabeer) September 4, 2026
“>
வெறும் போக்குவரத்துச் சாதனமாக இல்லாமல், தன் குடும்பத்தைக் காப்பாற்றிய வாழ்வாதாரக் கருவியாக அந்தப் பேருந்தைக் கருதிய ஓட்டுநர் பால்குரியனின் இந்த நற்பண்பு பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. கடினமான பணியிலும் மனிதநேயம் மறையவில்லை என்பதை எடுத்துக்காட்டும் இந்த நெகிழ்ச்சியான காணொளி தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
