ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் சேவாஸ்ரம் பள்ளியின் விடுதியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இரவு நேரத்தில், விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த 8 மாணவர்களின் கண்களில் சில சக மாணவர்கள் ஃபெவிகுவிக் (விரைவாக ஒட்டும் பசை) ஊற்றியதால், அவர்களால் கண்களைத் திறக்க முடியவில்லை. இதனால் விடுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு, பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். முதலில் கோச்சபடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள், நிலைமை மோசமடைந்ததால், பூல்பனி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

மருத்துவர்களின் கூற்றுப்படி, எட்டு மாணவர்களில் ஏழு பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, ஒரு மாணவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியதால், மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு விசாரணைக்கு உத்தரவிட்டார். பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், பள்ளி மற்றும் விடுதி நிர்வாகத்தின் அலட்சியம் இதில் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

மாணவர்களின் கண்களில் ஃபெவிகுவிக் ஊற்றப்பட்டது ஏன்? இது வெறும் குறும்புக்காக செய்யப்பட்டதா அல்லது வேறு தவறான நோக்கத்துடன் நடந்ததா என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மருத்துவர்கள் கூறுகையில், ஃபெவிகுவிக் கண்களில் பட்டதால் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதால் பெரிய ஆபத்து தவிர்க்கப்பட்டது.