பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில், 15 ஆண்டுகளாக திருமண வாழ்க்கை நடத்தி வந்த தம்பதியருக்கு இடையே ஏற்பட்ட தகராறு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹோட்டல் ஒன்றில் கணவர் தனது மனைவியை இன்னொரு ஆணுடன் பிடித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து கணவர் ரவி குலாட்டி கூறுகையில், கடந்த 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி ஹிமானியை திருமணம் செய்ததாகவும், கடந்த 2018 ஆம் ஆண்டிலேயே தனது மனைவி ஒருவருடன் ஹோட்டலில் இருந்தது தெரிய வந்ததாகவும் தெரிவித்தார். அப்போது, இரு குடும்பத்தினரின் தலையீட்டின் பேரில் மனைவி மன்னிப்பு கேட்டதாகவும், சிறு குழந்தைகள் இருப்பதால் குடும்பம் சீராகும் என்ற நம்பிக்கையில் அவளை மன்னித்ததாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில், சமீபத்தில் மீண்டும் சந்தேகம் எழுந்ததாகவும், மதிய நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறிய மனைவி பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் பதிலளிக்கவில்லை என்றும் ரவி தெரிவித்தார். இதையடுத்து, அவர் தனது மனைவி பயன்படுத்தி வந்த வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் இடத்தை கண்டறிந்து, ஹோட்டல் ஒன்றிற்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு, மனைவியை மற்றொரு ஆணுடன் கண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி, பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. அதில், பத்திரிகையாளரும் திரைப்பட தயாரிப்பாளருமான தீபிகா நாராயண் பரத்வாஜ், தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில், இவ்விவகாரம் சட்டரீதியாக வேறு திருப்பங்களை எடுக்கக்கூடும் என கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, ரவியின் தந்தை பர்வேஸ் குலாட்டி கூறுகையில், இந்த பிரச்சினை கடந்த பல ஆண்டுகளாக தொடர்வதாகவும், ஏற்கனவே 5 முதல் 7 ஆண்டுகளுக்கு முன்பே இதுபோன்ற சம்பவம் ஒன்று ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். அப்போது, இரு குடும்பத்தினரும் ஒன்றாக அமர்ந்து பேசி விவகாரத்தை தீர்த்ததாகவும், ஒரு எம்.எல்.ஏ. வீட்டில் கூட சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் அவர் கூறினார்.

 

 

தற்போது, மீண்டும் இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும், தனது மருமகள் இனி கணவருடன் வாழ விரும்பவில்லை என்றும், பெற்றோர் வீட்டிற்கு செல்ல விரும்புவதாகவும் தெரிவித்ததாக பர்வேஸ் குலாட்டி கூறினார். மேலும், ஹோட்டலில் காணப்பட்ட ஆண் தனது சகோதரன் என குடும்பத்தினரிடம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்த பலமுறை முயற்சி செய்தும், இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை எனவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அதிகாரபூர்வமான சட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.