பெங்களூரு புறநகர்ப் பகுதியான அனேக்கல் அருகே சந்தாபுரத்தில் கொடூரமான கொலை சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஹெப்பகோடி பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர், தனது மனைவி மானசா (26)வை கோடாரியால் வெட்டி கொலை செய்ததுடன், அவரது தலையை துண்டித்து ஸ்கூட்டரில் எடுத்துச் சென்றார்.

நேற்றிரவு 11.30 மணியளவில், அனேக்கல்–சந்தாபுரம் நெடுஞ்சாலையில் ரோந்து சென்ற போலீசார், ரத்தக் கறையுடன் ஸ்கூட்டரில் சென்ற சங்கரை சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப்பிடித்தனர்.

போலீசார் ஸ்கூட்டரை சோதனை செய்தபோது, அதில் ஒரு பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலை இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த போலீசாரிடம் சங்கர், “இது என் மனைவியின் தலையைத் தான்; நான் தான் கொலை செய்தேன்” என ஒப்புக்கொண்டார்.

தொடர் விசாரணையில், மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்து, சங்கர் கோபத்தில் மனைவியை வெட்டிக்கொன்றது தெரியவந்தது. இந்த சம்பவம் பெங்களூரு நகரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தம்பதிக்கு 3 வயதில் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.