விழுப்புரம் அருகே கண்டம்பாக்கம் ரயில் நிலையம் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

விழுப்புரம் அடுத்த ஜானகிபுரம் அடுத்த பகுதியில் இருக்கக்கூடிய கண்டம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி. இவருக்கும் அதே கிராமத்தில் இருக்கக்கூடிய பரணிதரன் என்பவருக்கும்  ஏற்கனவே கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாகவே முன்விரோதம் காரணமாக பல்வேறு பிரச்சினைகள் இருந்தது. தொடர்ந்து இவர்களுக்கு மத்தியில் இருதரப்பினருக்கும் தொடர்ந்து பிரச்சினைகள் இருந்ததாக காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று மதியம்  கண்டம்பாக்கம் ரயில் நிலையத்தில் பரணிதரன் மற்றும் அவரது நண்பர்கள் ரயில் நிலையம் பகுதியில் அமர்ந்திருந்தனர். அப்போது நாராயணசாமி இன்று நாட்டு வெடிகுண்டை கொண்டு வந்து பரணிதரன் மற்றும் அவரது நண்பர்கள் மீது வீசி தாக்கியுள்ளார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அறிந்த தாலுகா காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களுக்கு ஏதேனும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் எந்த மாதிரியான நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது என்று பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து நாட்டு வெடிகுண்டு வீசிய நாராயணசாமி என்பவரை  தேடி வருகின்றனர். இந்த நாட்டு வெடிகுண்டு வீச்சினால் பரணிதரனுக்கு படுகாயம் ஏற்பட்ட நிலையில், அவரை போலீசார் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில்  அனுமதித்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.