ஜம்மு-காஷ்மீரின் கண்டோஹ் பகுதியில் உள்ள தலோரன் விளையாட்டு மைதானத்தில் ‘பல்லேசா செனாப் பிரீமியர் லீக்’  டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ‘பாட்ஷா 11 பல்லேசா’ மற்றும் ‘ஒய்.சி.சி ஜிம்கானா கிஷ்த்வார்’ ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது ஒரு  அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாட்ஷா அணிக்காக விளையாடிய  சுஹைல் என்ற இளம் வேகப்பந்து வீச்சாளர், தனது 2 ஓவர்களில் வெறும் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தலாகச் செயல்பட்டார்.

ஆனால், தனது இரண்டாவது ஓவரின் கடைசி பந்தை வீசி முடித்தவுடன், ஷூ லேஸைக் கட்டுவதற்காக அவர் கீழே குனிந்துள்ளார். பின்னர் எழுந்து நிற்க முயன்றபோது திடீரென நிலைதடுமாறி மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார்.

 

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக வீரர்களும் மைதானத்தில் இருந்தவர்களும் உடனடியாக வாகன ஏற்பாடு செய்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சுஹைல் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த ஆட்டத்தில் அவரது அணி முதலில் பேட்டிங் செய்து 12 ஓவர்களில் 147 ரன்கள் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து கிரிக்கெட் போட்டித் தொடர் உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டது. இளம் வீரரின் மரணத்திற்கான துல்லியமான காரணம் இன்னும் தெரியவரவில்லை என்றாலும், உடற்கூறாய்வு அறிக்கைக்குப் பிறகே முழு விவரமும் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது