மருதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த  புகாரில் கைது செய்யப்பட்ட நபர், ஆக்ரா கோட்டை ரயில் நிலைய போலீஸ் காவலில் இருந்து தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தன்று மருதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இளம்பெண் ஒருவர் தனது சகோதரருடன் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மர்ம நபர் ஒருவர், அந்தப் பெண்ணிடம் மிகவும் அநாகரீகமாக நடந்துகொண்டதோடு, அவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனை அந்தப் பெண்ணும் அவரது சகோதரரும் தட்டிக்கேட்டபோது, அந்த நபர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இளம்பெண்ணின் சகோதரரைத் தாக்கியுள்ளார்.

தாக்குதல் நடத்திய கும்பலிடம் இருந்து தப்பிக்க முயலாமல், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் துணிச்சலுடன் செயல்பட்டு தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவனை மடக்கிப் பிடித்தனர். ரயில் ஆக்ரா கோட்டை நிலையத்தை அடைந்ததும், பிடிபட்ட நபரை அங்கிருந்த ரயில்வே பாதுகாப்புப் போலீசாரிடம் (GRP) ஒப்படைத்தனர்.

அவர் உரிய பாதுகாப்புடன் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அந்த நபர் போலீஸ் கண்காணிப்பில் இருந்த சில நிமிடங்களிலேயே அங்கிருந்து தப்பியோடிவிட்டார். உயர் பாதுகாப்பு கொண்ட ரயில் நிலைய வளாகத்தில், போலீசாரிடம் பிடிபட்ட ஒரு நபர் எப்படித் தப்ப முடியும் எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஆக்ரோஷமாகக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

போலீசாரின் மெத்தனப் போக்கே குற்றவாளி தப்பக் காரணம் எனப் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளரயில்வே போலீசார், தப்பியோடிய நபரைத் தேடி வருகின்றனர். ரயிலில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.