வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் உப்பரப்பள்ளி கிராமத்தில் மகாலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மகாலட்சுமி குடியாத்தம் நகரில் இருக்கும் ஒரு ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது 40 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் மகாலட்சுமிக்கு பணம் எடுத்து கொடுத்து உதவுவது போல நடித்தார். அவர் பத்தாயிரம் ரூபாய் பணத்தை மகாலட்சுமியிடம் கொடுத்து வேறு ஒரு ஏடிஎம் கார்டு மாற்றி கொடுத்துள்ளார்.

அதனை வாங்கிக் கொண்டு மகாலட்சுமி அங்கிருந்து சென்ற பிறகு மர்ம நபர் மகாலட்சுமியின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி 17,000 ரூபாய் பணத்தை எடுத்துள்ளார். இதுகுறித்து குறுந்தகவல் வந்ததும் அதிர்ச்சியடைந்த மகாலட்சுமி தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.