நாடாளுமன்றத்தில் 2023 – 2024 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று மக்கள் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக 100 நாள் வேலை திட்டத்திற்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த பட்ஜெலிலும் எதிர்பார்த்தபடி நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. 100 நாள் வேலை திட்டத்திற்காக இந்த வருடம் ரூ.60,000 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த நிதியாண்டில் மத்திய பட்ஜெட்டில் 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.73,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 21.66% குறைவான  அளவிலேயே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் கடந்த ஆண்டு பட்ஜெட்டிலும் இந்த திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற நிலை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கீட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறைத்துள்ளார். கடந்த 2020 – 2021 -ஆம் மத்திய பட்ஜெட்டில் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட அதிக அளவில் செலவாகியுள்ளது. அப்போது ரூ.98 ஆயிரத்து 468 கோடி செலவிடப்பட்டிருந்த நிலையில் திட்ட செலவு மதிப்பீடுகள் திருத்தப்பட்டது. அதேபோல் 2022 – 2023ஆம் நிதி ஆண்டுக்கான ஒதுக்கீட்டில் மறுகனக்கீட்டில் ரூ.89 ஆயிரத்து 400 கோடி வந்தது.

இதனுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது 49 சதவீதம் குறைவான அளவில் தற்போதைய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த கால பட்ஜெட்டுகளை பொருத்தவரையில் 2020 – 2021 ஆம் ஆண்டில் ரூ.60 ஆயிரம் கோடியும், 2021 – 2022-ம் ஆண்டில் ரூ.61 ஆயிரத்து 500 கோடியும் 2022- 2023 ஆம் ஆண்டில் ரூ.73 ஆயிரம் கோடியும் ஒதுக்கப்பட்டது. இருப்பினும் இந்த வருடம் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டது. ஏனென்றால் திட்டத்திற்கான செலவுகள் முன்கூட்டியே மதிப்பீடுகளை விட அதிகமாகவே வருகிறது. மேலும் இதில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கான கூலி வழங்குவதில் கூட சிக்கல் இருந்து வருகிறது. இது போன்ற நிலையில் இந்த வருடத்திற்கான மத்திய பட்ஜெட் ஒதுக்கீடும் நிதி குறைக்கப்பட்டிருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.