
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமி நகர் பகுதியில் வினோதா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்து எட்டாம் தேதி மதிய நேரம் வகுப்பறைக்கு ஆசிரியர் வராததால் மாணவர்கள் முதல் மாடியில் விளையாடியதாக தெரிகிறது. அப்போது விளையாடிக் கொண்டிருந்த வினோதாவின் மகன் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதனால் மாணவனின் தாடை உடைந்து படுகாயம் ஏற்பட்டது. உடனே ஆசிரியர்கள் மாணவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை முடிந்து மாணவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆசிரியர்கள் மாணவனிடம் படிக்கட்டில் இருந்து கீழே தவறி விழுந்ததாக பொய் கூறும் படி சொல்லியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே மாணவனை தனியார் மருத்துவமனையில் பெற்றோர் பரிசோதனை செய்து பார்த்தனர். அப்போது வாய் தாடை உடைந்து பற்கள் சேதம் அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அறுவை சிகிச்சை செய்ய ஒரு லட்ச ரூபாய் செலவாகும் என கூறியுள்ளனர். இதனால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மகனின் சிகிச்சை செலவுக்கு பணம் பெற்று தர வேண்டும் எனவும் மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.