இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் இடையிலான உறவுகள் பல தசாப்தங்களாக பழமையானவை. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே இரு நாடுகளின் மக்களும் நட்புறவைப் பகிர்ந்து வருகின்றனர். இந்தியாவில் தஞ்சம் புகுந்திருக்கும் ஏராளமான ஆப்கானியர்கள், இங்கேயுள்ள மக்களின் அன்பை அனுபவிக்கின்றனர். அதேபோல், ஆப்கானிஸ்தான் மக்களும் இந்தியர்களை அன்புடனும் மரியாதையுடனும் எதிர்கொள்கிறார்கள். இதை உறுதிப்படுத்தும் வகையில், சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியான ஒரு வீடியோ தற்போது பரவலாக வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு இந்திய சுற்றுலாப் பயணி ஆப்கானிஸ்தான் வழியாக பைக்கில் பயணிப்பது காணப்படுகிறது.

 

காபூல் நோக்கி பயணம் செய்யும் போது, ஒரு சோதனைச் சாவடியில் தாலிபான் பாதுகாப்பு காவலர் அவரை நிறுத்தி பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை கேட்கிறார். அப்போது, அவர் “நான் இந்தியாவிலிருந்து வந்தேன்” என பதிலளிக்கிறார். இதனை கேட்ட தாலிபான் காவலர் உடனே அவரை பாஸ்போர்ட் காட்ட வேண்டாம் என தடுத்து நிறுத்தி, “நீ இந்தியாவிலிருந்து வந்தால் எந்த ஆவணங்களையும் எடுக்காதே. காபூலுக்குச் சென்று கவலைப்படாமல் சுதந்திரமாகச் சுற்று, ஏனென்றால் நீ எங்கள் சகோதரர்” என கூறுகிறார்.

அதுமட்டுமல்லாமல், அந்த காவலர் அந்த இந்திய சுற்றுலாப் பயணிக்கு தேநீர் வழங்க முன்வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் பைக் ஓட்டுநர் தாமதமாகிவிடும் என கூறி நன்றி தெரிவித்துக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தார். பின்னர் தாலிபான் காவலர் “இந்தியா–ஆப்கானிஸ்தான் சகோதரத்துவம் நீடூழி வாழ்க” என கூறி அவரை அனுப்பியதாக வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான மக்கள் நட்புறவைக் காட்டுவதாகப் பெரிதும் பாராட்டப்படுகிறது.

ஆகஸ்ட் 2021 இல் அமெரிக்கா தனது படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, அந்நாட்டில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். இதனால், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான உறவுகள் தற்காலிகமாக மந்தமானது. ஆனால் சமீபத்திய மாதங்களில், தாலிபான் அரசாங்கத்துடனான இந்தியாவின் உறவுகள் மீண்டும் மேம்பட்டு வருகின்றன. மேலும் இரு நாடுகளின் அதிகாரிகளும் பல துறைகளில் ஒன்றிணைந்து பணியாற்றி வருகின்றனர். அண்மையில், இரு தரப்பினருக்கும் இடையில் பல சந்திப்புகள் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.