மனிதர்கள் செல்போன்களுக்கும் சமூக ஊடகங்களுக்கும் எளிதில் அடிமையாவதற்கு நமது மூளையில் சுரக்கும் ‘டோபமைன்’ என்ற ரசாயனமே முக்கியக் காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். புதிதாக அல்லது சுவாரஸ்யமாக ஏதேனும் ஒரு செயலைச் செய்யும்போது, நமது மூளையில் இந்த டோபமைன் சுரக்கிறது. பிறரிடம் பாராட்டு பெறுவது அல்லது புதிய தகவல்களைத் தெரிந்துகொள்வது போன்ற விஷயங்கள் இந்த ரசாயனச் சுரப்பைத் தூண்டுவதால், மூளையின் இந்தப் பகுதி ‘பரிசுப் பகுதி’ என்று அழைக்கப்படுகிறது.
ஒரே செயலில் நீண்ட நேரம் கவனம் செலுத்துவதை விட, அவ்வப்போது புதிய விஷயங்களில் கவனத்தைத் திருப்பும்போது டோபமைன் சுரப்பு திடீரென அதிகரிக்கும். இந்த உச்ச நிலையைத்தான் நமது மூளை எப்போதும் விரும்புகிறது. இதைத் தொடர்ந்து தேடிக் கொண்டே இருக்கும் நிலையையே நாம் ‘சலிப்பு’ என்கிறோம். இதனால் மூளை ஒரே இடத்தில் நிற்காமல், புதிய தூண்டுதல்களை நோக்கி ஓடிக் கொண்டே இருக்கிறது.
செல்போன்களில் வரும் நோட்டிஃபிகேஷன்கள், குறுஞ்செய்திகள் மற்றும் சமூக ஊடகங்களில் கிடைக்கும் ‘லைக்’ போன்ற பாராட்டுகள், ஏதோ ஒரு புதிய விஷயம் கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை உருவாக்கி டோபமைனைச் சுரக்க வைக்கின்றன. இதை ‘புதுமை விரும்பும் பண்பு’ என்று அழைக்கிறார்கள். காபி அல்லது சிகரெட்டை விட பல மடங்கு அதிகமான தூண்டுதல்கள் இணையத்தில் இருப்பதால், இந்த அடிமைத்தனம் யாராலும் எளிதில் நிறுத்த முடியாத ஒரு சுழலாக மாறுகிறது.
இதன் காரணமாக, மனிதர்களால் தொடர்ச்சியாக ஒரே வேலையில் கவனத்தைச் செலுத்த முடியாமல் போவதோடு, ‘கவனச் சிதறலுக்கு அடிமையாதல்’ என்ற பழக்கத்தையே மூளை அதிகம் விரும்பத் தொடங்குகிறது. இறுதியில், மனிதர்கள் தங்கள் அறியாமலேயே செல்போன்களின் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாகச் சிக்கிக் கொள்கிறார்கள் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
