துருக்கி சிரியா எல்லையில் கடந்த 6 ஆம் தேதி காலை 4:20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இதனால் சிரியாவிலும் துருக்கியிலும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது. இந்த நிலநடுக்கம் லெபனான், இஸ்ரேல், ஜோர்தான், கிரீன்லாந்து போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் தற்போது வரை 20000 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை அடுத்து மீட்பு பணிகளில் துருக்கி அரசுக்கு உதவுவதற்காக இந்தியா போன்ற பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றது. அதில் 1.78 பில்லியன் அமெரிக்க டாலர்களை உலக வங்கி துருக்கிக்கு நிவாரண நிதியாக வழங்க உள்ளது. இந்த நிலையில் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிரியாவிற்கு உலக சுகாதார அமைப்பின் தலைவரான டெட்ரோஸ் அதானோம் செல்கின்றார். மேலும் அவர் அங்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் நிவாரண பணிகளையும் நேரில் சென்று பார்வையிடுகிறார்.