கோயம்புத்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அலட்சியத்தின் அடிப்படையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. வயதான தனது தந்தையை சிகிச்சைக்காக அழைத்துச்சென்ற ஒருவர், மருத்துவமனை ஊழியர் சக்கர நாற்காலிக்காக பணம் கேட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

செப்டம்பர் 9ஆம் தேதி, கோவையைச் சேர்ந்த வி. காளிதாசன், தனது 84 வயதான தந்தை சி. வடிவேலை, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையின் வெளிநோயாளி பிரிவிற்கு அழைத்துச் சென்றார். அங்கு வரவேற்பறையில் ஒரே ஒரு ஊழியர் மட்டுமே இருந்ததாகவும், அவர் தேவையான உதவிகளை வழங்காமலிருந்ததாகவும் காளிதாசன் தெரிவித்துள்ளார்.

 

காளிதாசன் கூறுகையில், “என் தந்தையை சிகிச்சைக்காக உயர்மாடிக்கு அழைத்துச் சென்றேன். பின்னர், அவரை தரைத்தளத்திற்கு அழைத்து செல்ல சக்கர நாற்காலி கேட்டபோது, ஒரு பெண் ஊழியர் ரூ.100 கேட்டார்,” என்றார். “நான் பணம் கொடுக்க சம்மதித்தேன். ஆனால், 30 நிமிடங்கள் காத்திருக்கச் சொன்னார். பிறகு, நான் லிஃப்ட் மூலம் தந்தையை கீழே அழைத்துச் சென்றேன். எங்களுடன் வந்த ஒருவர் அந்தச் சூழ்நிலையை வீடியோவாக பதிவு செய்தபோது, ஊழியர் சக்கர நாற்காலியுடன் வந்தார். ஆனால், அதற்குள் நாங்கள் ஆட்டோவில் ஏறியிருந்தோம்,” என்று  காளிதாசன் தெரிவித்தார்.

இந்த வீடியோ இணையத்தில் பரவியதும், சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் விசாரணையை  தொடங்கியது. அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட இரண்டு மேற்பார்வையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து, ஐந்து நாட்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மருத்துவக் கல்லூரியின் டீன் டாக்டர் எம். கீதாஞ்சலி கூறுகையில், “ஊழியர் பணம் கேட்டதாக உறுதியாக எந்த ஆதாரமும் எங்களிடம் இல்லை. இருப்பினும், இந்த வகைத் தவறுகள் மீண்டும் நடைபெறாத வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன,” என்றார். அத்துடன், எதிர்காலத்தில் நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நேரத்தில் உதவி கிடைக்கும்படி, நான்கு ஊழியர்கள் சக்கர நாற்காலிகளுடன் தயாராக இருப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.