கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் தசமி பார்க் ரெசிடென்சி பகுதியில் அருண் தீபக் என்பவர் வசித்து வருகிறார். இவர் பீளமேடு நாராயணசாமி லேஅவுட் பகுதியில் தனியார் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு தீபக் துபாய்க்கு சென்றார். அப்போது தீபக்கின் நண்பர் தினேஷ்குமார் மூலம் சென்னை சேர்ந்த கருணாகரன், சுஜித் ஆகியோர் அறிமுகம் ஆனார்கள். அவர்கள் தங்களுக்கு தொழில் தொடங்க பணம் தந்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் அதனை திரும்ப தந்து விடுகிறோம் என தெரிவித்தனர்.

இதனை நம்பி கோவைக்கு வந்தவுடன் தீபக் 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார். அவர்கள் 5 லட்ச ரூபாய் பணத்தை மட்டும் திரும்ப கொடுத்துள்ளனர். மீதமுள்ள பணத்தை கொடுக்கவில்லை. இதுகுறித்து கேட்டபோது சுஜித்தும், கருணாகரனும் சரியாக பதில் அளிக்கவில்லை. இதுகுறித்து தீபக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.