இன்றைய காலகட்டத்தில் ஒரு சில லைக்குகளுக்காகவும், பார்வைகளுக்காகவும் மனிதர்கள் தங்கள் உயிரையே பணயம் வைக்கத் துணிந்துவிட்டனர் என்பதற்கு இந்த வைரல் வீடியோவே சாட்சி. சமூக வலைதளங்களில் தற்போது தீயாய் பரவி வரும் இந்த வீடியோவில், ஒரு இளம்பெண் எஸ்கலேட்டரில் (மின்னணு படிக்கட்டு) செய்த காரியம் பார்ப்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது. படிக்கட்டிற்கும் எஸ்கலேட்டருக்கும் இடையில் உள்ள சுவரில் ஏறி, அங்கிருந்து எஸ்கலேட்டருக்குள் குதிக்கும் அவர், அங்கேயும் நிற்காமல் மேலே செல்லும் படிக்கட்டில் கீழே நோக்கி ஓடி வந்து சாகசம் செய்கிறார். “கொஞ்சம் பிசகினாலும் உயிர் போயிருக்குமே” என்ற பயம் கூட இல்லாமல் அவர் செய்த இந்த ரீல்ஸ் இப்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

​எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். “இவர்களுக்கு ஏதாவது விபத்து ஏற்பட்டால் உடனே அரசைத் தான் குறை சொல்வார்கள்” என இந்த வீடியோவை பதிவிட்டவர் விளாசியுள்ளார். நெட்டிசன்கள் பலரும், “இவர்களுக்கு அறிவே இல்லையா? இவர்களை உடனடியாக 7 நாள் சிறையில் அடைக்க வேண்டும்” எனத் தங்கள் கோபத்தைக் கொட்டி வருகின்றனர். ‘ரீல்ஸ்’ எடுக்கிறேன் என்ற பெயரில் பொது இடங்களில் மற்றவர்களுக்கு இடையூறு விளைவிப்பதோடு, உயிருக்கே ஆபத்தான இத்தகைய செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது!