ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள சிடாவா காவல் நிலையத்தில், ஒரு சினிமா படப்பிடிப்பையே மிஞ்சும் அளவுக்கு நடந்த நிஜச் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர வைத்துள்ளது. மரம் கடத்துபவர்களிடம் லஞ்சம் வாங்கிய அனில் குமார் என்ற காவலரை கையும் களவுமாகப் பிடிக்க ஜெய்ப்பூர் ஊழல் தடுப்புப் பிரிவு (ACB) போலீசார் திட்டமிட்டனர். ஆனால், ஏசிபி அதிகாரிகள் வருவதைக் கண்ட அந்த லஞ்சப் போலீஸ்காரர், சற்றும் யோசிக்காமல் அங்கிருந்த போலீஸ் ஜீப்பை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.

​இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஏசிபி காவலர் லட்சுமி நாராயணன், தப்பியோடும் ஜீப்பின் கதவைப் பிடித்துக்கொண்டு தொங்கியபடியே சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை சென்றார். ஆனால், லஞ்சப் போலீஸ்காரர் ஜீப்பை ஓரங்கட்டி ஒரு காரின் மீது மோதச் செய்ததில், லட்சுமி நாராயணன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். இந்த முழுச் சம்பவமும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. காயமடைந்த அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தப்பியோடிய லஞ்சப் போலீஸ்காரரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.