12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை  வெளியாகும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. முன்னதாக மே 5ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் நீட் தேர்வுகள் இன்று  நடத்தப்பட இருப்பதால் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மாணவர்களின் மனநலனை பாதிக்கக் கூடாது என்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாளை  +2 ரிசல்ட்களை இணையத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மாணவர்கள் தேர்வு முடிவுக்கு பின் உயர்கல்வியில் சேர்வதற்கு ஆலோசனை பெற 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில், எந்த கல்லூரியில் சேருவது, எந்த படிப்பில் சேரலாம், உயர்கல்விக் கடன் எப்படி பெறுவது உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களுகு விளக்கம் அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் +2 தேர்வு முடிவுகள் எத்தனை மணிக்கு என்பதில் குழப்பம் இருந்தது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் நாளை காலை 9.30 மணிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் முடிவுகளை வெளியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.