
நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு மத்திய அரசாங்கம் ஒப்புதல் கொடுத்துள்ளது. இதனை தற்போது அரசியல் கட்சிகள் பலரும் வரவேற்று வரும் நிலையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது,
மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பும் சேர்த்து எடுக்கப்படும் என்ற நமது மத்திய அமைச்சரவைக் குழுவின் அறிவிப்பை மனதார வரவேற்கிறேன். சாதிவாரி கணக்கெடுப்பை மையமாக வைத்து நாட்டில் குழப்பத்தை உண்டு செய்ய நினைத்தவர்களின் அரசியல் சதியை உடைத்தெறிந்த நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. மோடி அவர்களுக்கும், மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிற்படுத்தப்பட்ட, பட்டியல் மற்றும் பழங்குடியின சமூக மக்களின் உரிமைகளை வெறும் அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தும் கட்சிகளுக்கு மத்தியில், பாரதப் பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்கள் மட்டும் தான் மெய்யான சமூகநீதியின் காவலராக விளங்குகிறார் என்பது மீண்டுமொருமுறை உறுதியாகியுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.